அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களை தேர்தல் முறைகேடு என அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் முன்வைத்த வாதத்தில் கூறியதாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
சூரியன், சந்திரனை தவிர மீதமுள்ளவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடுவது முறைகேடாகும். மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி தரப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். எனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் வாதிட்டார்.
இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக பொதுநலன் சார்ந்தது. இதனை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். வரும் மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.



