சென்னை மாவட்ட வில்வித்தை பயிற்சி மையத்துக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு, பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாg அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்ட நிதியுதவியுடன் வில்வித்தை பயிற்சிக்கான மையம் சென்னையில் அமைய உள்ளது.
இந்த மையத்தில் தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி பெற விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள், நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக வளாகத்தில் பிப். 8-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் உடல்தகுதி, வில்வித்தை விளையாட்டுத் திறன் மற்றும் அவர்கள் ஏற்கெனவே மாவட்ட, மாநில அளவில் பெற்ற பதக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர், சென்னை நேரு பூங்காவில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரடியாகவோ 74017 03480 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



