சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி சதத்தால் ஜார்க்கண்ட் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
புனேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான இஷான் கிஷன் 49 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சையது முஸ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னர் கடந்த 2023-ம் ஆண்டு சீசனின் இறுதிப் பேட்டியில் பரோடா அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் அன்மோல்பிரீத் சிங் 113 ரன்கள் விளாசியிருந்தார். இஷான் கிஷனுக்கு உறுதுணையாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார்.
இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய அனுகுல் ராய் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், ராபின் மின்ஸ் 14 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 31 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹரியானா அணி சார்பில் சமந்த் ஜாகர் 4 ஓவர்களை வீசி 62 ரன்களையும், அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்களைவீசி 51 ரன்களையும் தாரை வார்த்திருந்தனர்.
263 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹரியானா அணி 18.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக யஷ்வர்தன் தலால் 53, சமந்த் ஜாகர் 38, நிஷாந்த் சிந்து 31 ரன்கள் சேர்த்தனர். ஜார்க்கண்ட் அணி தரப்பில் சுஷாந்த் மிஷ்ரா, பால் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். விகாஷ் சிங், அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2 கேட்ச்களையும், 101 ரன்களையும் விளாசிய இஷான் கிஷன் ஆட்ட நாயகனாக தேர்வானார். அனுகுல் ராய் தொடர் நாயகன் விருது வென்றார். அவர், பேட்டிங்கில் 303 ரன்களும் பந்து வீச்சில் 18 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.







