யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று (12-ம்தேதி) தொடங்குகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதே பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் உள்ளன. யு-19 இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் (யுஏஇ) மோதுகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்திய அணி மும்பை மற்றும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே தலைமையில் களமிறங்குகிறது. அவர் மீதும், இளம் அதிரடி பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் ரன்கள் வேட்டையாடி இருந்தனர்.
ஆயுஷ் மாத்ரே தொடர்ச்சியாக இரு சதங்களும், ஒரு அரை சதமும் அடித்திருந்தார். சூர்யவன்ஷி, மகாராஷ்டிரா அணிக்கு எதிராக சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். இவர்கள் இருவருமே சீனியர் அளவிலான போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் கூட்டாக 9 சதங்கள் அடித்துள்ளனர்.







