சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 2,100 பக்தர்கள் பாகிஸ்தான் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது. இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் அரசு பயண ஆவணங்களை வழங்கியது. இவர்களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர்.
கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர், ராணுவ மோதலுக்கு பிறகு இரு நாடுகள் இடையே முதல் மக்கள் தொடர்பு நடவடிக்கை இதுவாகும். இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்டவர்களில் 14 பேர் சீக்கியர்கள் அல்ல என்பதால் அவர்களை பாகிஸ்தான் திருப்பி அனுப்பிவிட்டது.
இது தவிர, தனியாக விசாக்களுக்கு விண்ணப்பித்த சுமார் 300 பேருக்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாததால் அவர்களையும் பாகிஸ்தான் திருப்பி அனுப்பிவிட்டது.














