சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மோந்தா புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் தொடர்ச்சியாக 2 நாட்கள் போட்டிகளை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 3-வது நாளான நேற்று போட்டிகள் தொடங்கின.
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான செக்குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் லியூ யானை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவதியை தோற்கடித்தார்.
இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் 6-4, 6-7(5-7), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் 2 நிமிடங்கள் போராடி ஜெர்மனியின் கரோலின் வெர்னர் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் முன்னணி வீராங்கனையான டோனா வெகிக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக இந்தியாவின் வைஷ்ணவி அட்கரை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சகஜா யாமலபள்ளி 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோஹோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.














