சீன நாட்டை சேர்ந்தவர் ட்யூ யாங்கன். விசா நிபந்தனைகளை மீறியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, நிபந்தனைகளை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக 2021-ம் ஆண்டு யாங்கன் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர், பல பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்காகவே ரேணிகுண்டாவில் ‘பிக் கிச்சன்’ என்ற சீன ஓட்டலை நடத்தினார். இதன் மூலம் பல கோடி சம்பாதித்தும் வரி செலுத்தவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்தனர். பின்னர் ரேணிகுண்டா, ஏர்பேடு ஆகிய இடங்களிலும், பிக் கிச்சன் ஓட்டல் மற்றும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.