பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை.
இதையைடுத்து பூடான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் 2 ஹெலிகாப்டர்களில் உடனடியாக விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய ஊழியர்கள் இருவரை மீட்டனர். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருவரையும் பூடான் ஹெலிகாப்டர் பின்னர் மீட்டது. சரியான நேரத்தில் ஹெலிகாப்டர்கள் அனுப்பி உதவி செய்த இந்திய ராணுவத்தினருக்கு ராயல் பூடான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.