உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்2023-ம் ஆண்டு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், கணவர் வீட்டார் தங்களது பெண்ணை வரதட்சணைக்காக கொலை செய்து மறைத்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனை விசாரித்த நீதிமன்றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அசோக் குமார் கூறியதாவது: மணமானதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து இளம்பெண் காணாமல் போனது குறித்து கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் மீது வரதட்சணை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உத்தர பிரதேச கண்காணிப்பு குழு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன பெண் மத்திய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். உத்தர பிரதேசத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இத்தனை காலம் ஏன் அந்த பெண் குடும்பத்தாரை தொடர்பு கொள்ளவில்லை என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. விரைவில் உண்மை வெளிவரும். இது நீதிமன்ற வழக்கு விசாரணையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அசோக் குமார் தெரிவித்தார்.