பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிசிசிஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்கொண்டிருந்தார். இதற்கிடையே அடுத்த பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படக்கூடும் என ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில், வரும் 28-ம் தேதி மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்நிலையில் 52 வயதான சச்சின் டெண்டுல்கரை நிர்வகிக்கும் அவருடைய எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகளும், வதந்திகளும் பரவி வருவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அத்தகைய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறோம்.
ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.