‘ஆபரேஷன் சிந்தூர்’ ஏன், எதற்காக? – சீனாவில் ராஜ்நாத் சிங் ஆவேசப் பேச்சு!

0
231

 “அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்நிலையில்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியான உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அந்த மாநாட்டில் பேசிய அவர், “பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவி வருகிறது. குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர். எல்லை தாண்டிய பயஙகரவாதம் தொடரக் கூடாது என்ற இலக்கோடு நடத்தப்பட்டது. சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே கொண்டிருக்கின்றன. அத்தகைய நாடுகள் தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன. பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக திகழ்ந்தால் என்ன நேரும் என்பதை நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் காட்டியுள்ளோம். இனியும் அத்தகைய இலக்குகளை குறிவைக்கத் தயங்கமாட்டோம். என பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது. எஸ்சிஓ குழு அத்தகைய நிலைப்பாடு கொண்ட நாடுகளை தயக்கமின்றி கண்டிக்க வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பின்னர் மோடி அரசின் அமைச்சரவையிலிருந்து சீனா சென்றுள்ள முதல் அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன், பாகிஸ்தான், ஈரான், கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்புக் குழு உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுனை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா – இந்தியா இடையேயான ராணுவ ஹாட்லைன் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பில், “சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் இந்தியத் தரப்பிலிருந்து ஷாங்காய் ஒத்துழைப்புக் குழுவின் கோட்பாடுகளை கடைப்பிடிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாடு வலியுறுத்தப்படும். சர்வதேச அமைதி, பாதுகாப்பில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எடுத்துரைக்கப்படும். இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை வேரறுக்க நீடித்த, கூட்டு முயற்சியின் அவசியம் தொடர்பாக அறைகூவல் விடுக்கப்படும். வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here