பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தம் பட்டியலின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு வடமாநிலங்களில் பட்டியலின அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதில் இறந்து போன குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வாண்டு ஏப்.
3-ம் தேதி சென்னை, அண்ணா சாலையில் விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாலாஜி உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயவேல், எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்தார்.