நித்திரவிளை அருகே மேலமட விளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). கொத்தனார். இவருடைய மனைவி விஜயராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். மதுபோதையில் இருக்கும் போது தனக்கு வாழ பிடிக்கவில்லை என அவர் கூறுவாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த செல்வராஜ் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் தந்தையின் கல்லறை அமைந்திருக்கும் பகுதியில் உறங்கப் போவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நேற்று கல்லறை தோட்டம் செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் செல்வராஜ் தூக்கில் தொங்கி பிணமாக காணப்பட்டார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














