தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.














