‘இந்திய அணி வலுவாக மீண்டு வரும்’ – யஷஸ்வி ஜெய்ஸ்வால் நம்பிக்கை

0
298

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான 23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43.44 சராசரியுடன் 391 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் அவர், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்திருந்தார்.

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் ஜெய்ஸ்வால் விளாசிய 161 ரன்கள் முக்கிய பங்கு வகித்தது. இந்த தொடரில் இரு அரை சதங்களையும் அடித்திருந்தார். இருப்பினும் மட்டை வீச்சில் முன்னணி வீரர்கள் பலர் பார்மில் இல்லாததால் இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக, தொடரின் முடிவு நாங்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. ஆனால் நாங்கள் வலுவாக திரும்பி வருவோம். ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு அதிக அர்த்தங்கள் உள்ளன’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம் இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற தவறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here