புதுக்கடை அருகே காப்புக்காடு, தாழவிளை பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (58). இவர் ஹைதராபாத்தில் சுற்றுலா துறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு. அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். அதன் பின் சிகாமணி அதே பகுதியில் தனது சகோதரி சாரதா என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் வாயில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்சை அழைத்து பரிசோதித்த போது, அவர் உயிரிழந்ததாக பணியாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிகாமணி உடல் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிகாமணியின் பெரியப்பா மகன் மோகன்தாஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














