குமரியில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் உள்ளது.
இந்த நிலையில் நேற்று (15-ம் தேதி) இரவு சுமார் 10 மணி அளவில் இனயம் பகுதியில் இருந்து கேரளா நோக்கி மினி டெம்போவில் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மங்காடு ஆற்றுப்பகுதியில் நித்திரவிளை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வந்த டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டியபோது நிறுத்தாமல் சென்றுள்ளது. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பொன்னப்பநகர் என்ற பகுதியில் வைத்து டெம்போவை பிடித்ததும், டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றார்.
டெம்போவை சோதனை செய்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 22 கேன்களில் 750 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் டெம்போ மற்றும் எண்ணெய்யை பறிமுதல் செய்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பிச் சென்ற டிரைவர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.