தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி! – சஞ்சு, திலக் வர்மா அசத்தல்

0
240

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபர்காவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் 3-வது வீரராக களமிங்கிய இந்திய அணியின் இளம் நட்சத்திரமான திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். அபிஷேக் சர்மாவும் இழந்த பார்மை மீட்டெடுத்திருந்தார். அவர், 25 பந்துகளில், 50 ரன்களை விளாசி சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுத்திருந்தார்.

இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில், கடைசி போட்டி வெள்ளிக்கிழமை (நவ.15) ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் இறங்கிய சஞ்சு சாம்சன் சதமடித்து 109 ரன்கள், அபிஷேக் சர்மா 36 ரன்கள், திலக் வர்மா 120 ரன்கல் என 20 ஓவர்களுக்கு 283 ரன்களை குவித்து அசத்தியது இந்திய அணி. ஓவர் முடிவில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவருமே ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

284 என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே பயங்கர தடுமாற்றத்துடன் ஆடியது. முதலில் இறங்கிய ரையான் ரிக்கல்டன் ஒரே ஒரு ரன்னுடன் நடையை கட்டினார். ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் 2 பந்துகளில் அவுட் ஆனார்.

கேப்டன் எய்டன் மார்க்ரம் 8 ரன்கள், க்ளாசன் 0, ஆண்டிலே சிம்லேன் 2, கேஷவ் மஹராஜ் 6 என சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தென் ஆப்பிரிக்கா அணி. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43, டேவிட் மில்லர் 36, மார்கோ ஜேன்சன் 29 ரன்கள் எடுத்து ஸ்கோரை ஏற்ற உதவினர்.

அதன்படி 18.2 ஓவர்களின் 10 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்க அணி. அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்களை எடுத்திருந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here