குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதி பண்டாரவிளையை சேர்ந்தவர் ஆல்பன் என்ற கிறிஸ்துவர். பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 6-12-2010 அன்று பைக்கில் ஆல்பன் செல்லும்போது முருகன் மற்றும் அவரது சகோதரர் ரசல்தாஸ் ஆகியோர் அவரை தடுத்து அரிவாளால் வெட்டினர்.
இதில் காயமடைந்த ஆல்பன் குலசேகர அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் முருகன் மற்றும் ரசல்தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கு விசாரணை பத்மநாபபுரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில் உதவி அமர்வு நீதிபதி மாரியப்பன் நேற்று (13-ம் தேதி) தீர்ப்பளித்தார். இதில் முருகன் ரசல்தாஸ் ஆகியோருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.