ஜன.19 முதல் 28 வரை காசி தமிழ் சங்கமம்-3 : கும்பமேளா காணும் வகையில் தள்ளிவைப்பு

0
230

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம்-3, வரும் ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. பிரயாக்ராஜின் கும்பமேளாவை தமிழர்கள் காணும் வகையில் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது.

உ.பி.யின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த ‘காசி தமிழ் சங்கமம் 2022 இல் துவக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமம் பிரதமர் நரேந்திர மோடியின் உருவாக்கமாக இருந்தது. இதனால், தனது மக்களவை தொகுதியில் நடைபெற்றதை பிரதமர் மோடியே துவக்கி வைத்திருந்தார். இரண்டாவது சங்கமமும் வாரணாசியில் நவம்பர் 2023-ல் நடைபெற்றது. இதேவகையில், தெலுங்கு மொழி மக்களுக்கும், குஜராத்தில் சவுராஷ்டிரா சங்கமங்களும் நடைபெற்றன.

தற்போது 2024-ல் நடைபெறவிருந்த மூன்றாவது சங்கமம் அடுத்த வருடத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாரணாசி அருகிலுள்ள பிரயாக்ராஜில் வருடந்தோறும் நடைபெறும் கும்பமேளாவை காணும் வகையில் 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. வழக்கம் போல், காசியில் இந்த சங்கமத்தையும் மத்திய கல்வித் துறையுடன் இணைந்து வாரணாசி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் மத்திய கல்வித் துறை அமைச்சக வட்டாரம், “கடந்த இரண்டு சங்கமங்களும் கடும் குளிர் நிலவும் நாட்களான நவம்பரில் நடைபெற்றன. இதை சமாளிக்க தமிழர்கள் பட்ட சிரமம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையும் சமாளிப்பதுடன், கும்பமேளாவையும் காணும் வகையில் இனி அது ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகள் குறித்த கானொளி கூட்டம் இன்று (நவ,11) நடைபெறுகிறது. இதில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் சில துறைகளும் உதவ உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

நமோ காட்
வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் முதல் சங்கமம் நடைபெற்றது. இரண்டாவது சங்கமம் வாரணாசி மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் அளித்த யோசனையை ஏற்று நமோ காட் (நமோ கரை), கங்கைக் கரையில் நடைபெற்றது. கங்கையில் புதிதாக அமைந்த இந்த நமோ காட், காசி தமிழ் சங்கம் நடைபெற்றதை தொடர்ந்து ஒரு சுற்றுலா தலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இங்கு, அன்றாடம் சுமார் ஐந்தாயிரம் பேர் வருகை தருகின்றனர்.

எனவே, மூன்றாவது சங்கமமும் நமோ காட்டிலேயே நடைபெற உள்ளது. வழக்கம்போல், இந்த சங்கமத்துக்கும் தமிழகத்தின் சென்னை, மதுரை மற்றும் ராமேஸ்வரம் நகரங்களிலிருந்து தமிழர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இவர்கள் வாரணாசியுடன், அயோத்யா மற்றும் பிரயாக்ராஜுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

கடந்த வருடங்களைப் போல் பல்வேறு வகை பிரிவினராக தமிழர்கள் இதில் இடம்பெற உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு நேரில் மற்றும் இணையதளம் மூலமாக சங்கமத்துக்கான தமிழர்களை சென்னையின் ஐஐடி தேர்வு செய்ய உள்ளது.

இந்த சங்கமம் நிகழ்ச்சி முதன்முதலாக துவக்கப்பட்ட போது மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாஜக அரசியல் லாபத்துக்கு செய்வதாக புகார் இருந்தது. இதையடுத்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், இனி ‘காசி தமிழ் சங்கமம்’ நடைபெறாது எனக் கருதப்பட்டது. ஆனால், இக்கருத்தை மறுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம்-3 நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here