தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நடுத்தெருவை சேர்ந்தவர் தவசிமுத்து (வயது 42). இவர் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் வீடு வாடகை எடுத்து சம்சா வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஒழுகினசேரி பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கீழ தத்தையார்குளத்தை சேர்ந்த செல்வம் (31), ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த அரவிந்த் (26), ராமானுஜம் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் சேர்ந்து தவசிமுத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் இந்த கும்பல் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம், அரவிந்த் உள்பட 4 பேரும் சேர்ந்து தவசிமுத்தை சரமாரியாக கம்பால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த தவசிமுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், அரவிந்த் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.