சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநகர் சாங்ஷாவின் கீழ் உள்ள லியுயாங் நகரில், ஹுவா ஷெங் பட்டாசு உற்பத்தி ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் 3 மீட்பு ரோபோக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும் 61 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடி விபத்து நடந்த இடம் 2 வெடிமருந்து கிடங்குகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், மீட்புப்படையினர் அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றியுள்ளனர். சாங்ஷா நகர மேயர் சென் போஷாங் கூறும்போது, ‘‘விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்கள் ஆழ்ந்த துயரத்திலும் மனவருத்தத்திலும் இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டகுடியிருப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார். இதனிடையே பட்டாசு உற்பத்தி நிறுவனத்தின் பொறுப்பாளரை கைது செய்துள்ள போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
