கூட்டணியில் எங்களுக்கு தொகுதி எண்ணிக்கை முக்கியம் அல்ல. யார் முதல்வராக வரக் கூடாது என்பதுதான் முக்கியம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு (என்ஜிஓ) சார்பில் சுதேசி, சுயசார்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் ‘வாழ்வாதார அடைக்காப்பகம்’ திட்டத் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
என்ஜிஓ பிரிவின் மாநில அமைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எல்.முரளிதரன் வரவேற்றார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், பாஜக மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், துணைத் தலைவர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்து உள்ளார். நானும் பழனிசாமியை சந்தித்துப் பேச உள்ளேன். கூடுதல் இடங்களைக் கேட்டு பாஜக நெருக்கடி கொடுக்கவில்லை.
எங்களுக்கு தொகுதி எண்ணிக்கை முக்கியம் அல்ல. யார் முதல்வராக வரக் கூடாது என்பதுதான் முக்கியம். அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்து அன்புமணி பேசியது சட்டவிரோதமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச்சான்று வழங்காததற்கு பிரதமரை குறை கூற முடியாது. அதை திரைப்பட தணிக்கை வாரியம் பார்த்துக் கொள்ளும்.
நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருப்பதாக தெரிவதைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியினர் நடிகர் விஜய்யுடன் பேசி இருக்கலாம் என்று கருதுகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.





