யோகிபாபு நடித்த ‘ட்ரிப்’, ‘தூக்குதுரை’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத், கிராமத்துப் பின்னணியில் இயக்கி இருக்கும் படம், ‘மனிதனும் தெய்வமாகலாம்’. செல்வராகவன், கவுசல்யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா என பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார். வியோம் என்டர்டெயின்மென்ட் சார்பில் விஜயா சதீஷ், ஆர்.எஸ் சதீஷ் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் ஏப்ரலில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்திடம் பேசினோம்.
Q
உண்மைச் சம்பவக் கதைன்னு டிரெய்லர்ல வருதே..?
A
ஆமா. தமிழ்நாட்டுல நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமா வச்சு உருவான படம் இது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தற மாதிரியான கதை. ஒரு கிராமத்துல, ஒரு குடும்பத்துக்குள்ள நடக்கிற பிரச்சினையில அரசியல் நுழையும்போது அந்த குடும்பத்துக்கும் கிராமத்துக்கும் என்ன விளைவுகள் ஏற்படுது. அந்தப் பிரச்சினைகளை தீர்க்க, ஹீரோ என்ன பண்றார்ங்கறது கதை. நாம எல்லாருமே அது மாதிரியான ஒரு பிரச்சினையை சந்திச்சிருப்போம். அது என்ன பிரச்சினைங்கறதுக்கு ரிலீஸ் வரை காத்திருப்போமே!
Q
பழிவாங்கும் கதையா?
A
பழிவாங்குறதுன்னு சொல்ல முடியாது. இது கணவன் மனைவிக்குள்ள இருக்கிற காதலைச் சொல்ற படம். அதுக்குள்ள வேற சில விஷயங்கள் நடக்குது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்றால் கொலை. கடவுள் பண்ணினா தண்டனைன்னு சொல்றோம்.
அப்படித்தான் இதுல வர்ற ஹீரோ, நீதியை எப்படி வாங்கி கொடுக்கிறார், நேர்மையான வழியில வாங்குனா எப்படியிருக்கும்? அதர்ம வழியா இருந்தா எப்படியிருக்கும்? அதை வாங்கிக் கொடுக்கும்போது சக மனிதர்கள் பார்வையில அவன் எப்படி தெய்வமா தெரியறான் அப்படிங்கறதை சொல்லியிருக்கேன்.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்
Q
செல்வராகவனை ஹீரோவா தேர்வு செஞ்சது ஏன்?
A
இந்த கதைப்படி ஒரு ‘இன்னொசன்டா’ன, ‘சாஃப்டான’ முகம் தேவை. அதாவது ஒரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ற சக்தியில்லாத ஒரு மனிதன் எப்படியிருப்பான்? அது மாதிரியான நடிகர் தேவைப்பட்டது.
சாதாரண ஒருத்தன் மேல அடி விழும்போது ஒருமுறை, ரெண்டு முறை தாங்கிக்குவான். தொடர்ந்து யாராலயும் தாங்கிக்கிட்டே இருக்க முடியாது. ஏதாவது ஒரு பாயின்ட்ல அவனுக்கு கோபம் வரும், வரணும். அப்படியான கேரக்டருக்கு செல்வராகவன் சார் சரியா பொருந்தினார். அவரை நடிக்கக் கேட்டதும், முழுக் கதையையும் படிச்சுட்டு சொல்றேன்னார்.
படிச்சுட்டு, இந்தக் கதையில ஒரு லைஃப் இருக்கு; நான் கண்டிப்பா நடிக்கிறேன்னு சொன்னார். இதுக்கு முன்னால பல படங்கள்ல நடிச்சிருந்தாலும் இதுலதான் முழு ஹீரோவா அவர் பண்ணியிருக்கார். இந்தக் கதைக்காக 10 கிலோ உடல் எடையை குறைச்சார். இதில் அவர் நுங்கு வியாபாரியா வர்றார்.
Q
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுசல்யாவை நடிக்க வச்சிருக்கீங்களே…
A
செல்வராகவன் சாருக்கு அக்காவா கவுசல்யா நடிச்சிருக்காங்க. அந்த கேரக்டருக்கு சிறந்த நடிப்பை கொடுக்கிற ஒரு நடிகை தேவைப்பட்டாங்க. அதனால அவங்களை நடிக்க கேட்டோம். கதையை கேட்டதும் ஓகே சொல்லிட்டாங்க. அவங்க கணவரா சதீஷ் நடிச்சிருக்கார். தமிழ், மலையாளப் படங்கள்ல நடிச்சுட்டு வர்ற அவர், இப்படத்தோட தயாரிப்பாளர்கள்ல ஒருத்தர்.
குஷி ரவி ஹீரோயினா நடிச்சிருக்காங்க. கன்னடத்துல வெளியான ‘தியா’ படத்துலயும் ‘அடிபொலி’ங்கற ஒரு ஆல்பம் பாடல்லயும் அவங்க நடிப்பு பிடிச்சிருந்தது. இந்தப் படத்து கேரக்டருக்கும் கச்சிதமா இருந்ததால அவங்களை நடிக்க வச்சோம். லிர்த்திகான்னு ஒரு குழந்தை நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தோட கதை சேலம் பக்கத்துல இருக்கிற நகரமலைங்கற மலைப்பகுதி கிராமத்துல நடக்குது. ஷூட்டிங்கும் அங்கதான் நடக்குது.
Q
‘மனிதனும் தெய்வமாகலாம்’னு சிவாஜி நடிச்சு ஒரு படம் வந்திருக்கே…
A
ஆமா. அந்தப் படத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. ரெண்டு கதையும் வேற. தலைப்பு மட்டும்தான் தொடர்பு. தயாரிப்பாளர்கள் சங்கத்துல இந்த டைட்டில் கேட்டோம். கொடுத்துட்டாங்க. இந்தப் படம் குடும்பத்தோட ரசிக்கிற மாதிரி இருக்கும்.














