மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து உரங்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்காசிய நிலவரம் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் மத்திய அரசு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் மாநிலங்களின் தயார் நிலை மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் திட்டங்கள் மற்றும் தயார் நிலை குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒரு குழுவாக செயல்படுவதை உறுதி செய்வதுதான் இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் ஆகும்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், இந்த மாநிலங்களின் தலைமை செயலர்களுடன் அமைச்சரவை செயலாளர் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவார்.














