ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வரும் மார்ச் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதை லக்னோ அணி நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ரிஷப் பந்த்தை, லக்னோ அணி ரூ.27 கோடிக்கு வாங்கியிருந்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார் 27 வயதான ரிஷப் பந்த்.
லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்ஜீவ் கோயங்கா கூறும்போது, “ரிஷப் பந்த்தை, பிறவி தலைவராகவே நான் பார்க்கிறேன். என்னை பொறுத்தவரையில் ஐபிஎல் கண்ட சிறந்த கேப்டனாக ரிஷப் பந்த் இருப்பார். ரிஷப் பந்த் எங்களுக்காக குறைந்தது 14 முதல் 15 ஆண்டுகள் விளையாடுவார், இந்த ஆண்டுகளில் குறைந்தது ஐந்து ஐபிஎல் பட்டங்களையாவது வெல்வார் என்று நம்புகிறோம்.” என்றார். – ஏஎப்பி














