சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்கிறது. பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச. 20-ல் வெளியாக இருக்கிறது. ஆதரவற்ற குட்டியான முஃபாசாவையும், அரச குடும்பத்தின் வாரிசான டாக்கா எனப்படும் அன்பான சிங்கத்தையும் சுற்றி இதன் கதைப் பின்னப்பட்டுள்ளது.
இதில் முஃபாசா கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ், ‘டாக்கா’வுக்கு அசோக் செல்வன் குரல் கொடுத்துள்ளனர். ரோபோ சங்கர், சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்புக்கு விடிவி கணேஷ் மற்றும் கிரோஸுக்கு நாசர் குரல் கொடுத்துள்ளனர்.
இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நாசர் பேசும்போது, “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி, அமிதாப் பச்சன், இளையராஜா குரல்கள் எனக்கு அதிகம் பிடிக்கும். எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால், இது குழந்தைகளுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் இதைப் பார்க்கலாம். தொன்மையான புராணக்கதைகள், வரலாற்றுக்கதைகள் எல்லாம் நம்மிடம் உள்ளன. அதையும் நல்ல தரத்தில் இன்னும் மெருகூட்டி படமாக்க வேண்டும்” என்றார். அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம்புலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.














