Home விளையாட்டு செய்திகள் “அணியாக நாங்களே சிறந்தவர்கள்” – பாக். உடனான ஆட்டம் குறித்து வருண் | T20 WC...

“அணியாக நாங்களே சிறந்தவர்கள்” – பாக். உடனான ஆட்டம் குறித்து வருண் | T20 WC – IND vs PAK

0

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த ஆட்டம் குறித்து தன் கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.

‘குரூப்-ஏ’ பிரிவில் இந்தியா மற்றும் பாக்சிதான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு அணிகளும் இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடி வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழலில் கொழும்பில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்த தொடரில் அனைத்து ஆட்டங்களையும் பாகிஸ்தான் அணி இலங்கையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. அந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் அந்த ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறும். இது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கும் பொருந்தும்.

இந்த சூழலில் வங்கதேச அணிக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை இந்த தொடரில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்தது. இருப்பினும் அதில் இருந்து அண்மையில் அந்நாட்டு அரசு பின்வாங்கியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாருக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி கூறியதாவது:

“சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகையில் முதல் பந்தில் இருந்தே நான் எனது ரிதத்தில் இருந்து பந்து வீச வேண்டி உள்ளது. அது சார்ந்து நான் நீண்ட காலம் பணியாற்றி வருகிறேன். எனது முதல் பந்து எளிதாக இருக்க கூடாது என கருதுகிறேன். முதல் பந்தில் இருந்தே நான் எனது டார்கெட்டில் இருக்க வேண்டும். பந்துவீச்சில் எனது வேரியேஷன், ஓவர்ஸ்பின் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன்.

எங்கள் அணி வலுவான சுழற்பந்து வீச்சை கொண்டுள்ளது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அதேநேரத்தில் இலங்கையின் களசூழல் அவர்களுக்கு அதிகம் பரிச்சயம். இருந்தாலும் அவர்களை விட அணியாக நாங்களே சிறந்தவர்கள். இந்த ஆட்டத்துக்கு நாங்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம்.

உலகக் கோப்பை தொடரில் எந்தவொரு அணிக்கு எதிராகவும் விளையாடும் போது நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் பெரிய தருணங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்” என்றார். இந்த தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடி, 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version