Home தேசிய செய்திகள் டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு போலீஸ் தடுப்புகளை உடைத்து விஹெச்பி போராட்டம்

டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு போலீஸ் தடுப்புகளை உடைத்து விஹெச்பி போராட்டம்

0

வங்கதேசத்தில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பினர் இன்று டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு முன்பு நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில், காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்தனர்.

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு வெளியே இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரர்கள் மோதினர். கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றதை தடுத்ததால், அவர்கள் காவல் துறையின் தடுப்புகளை உடைத்து முன்னேறினர். ஆனால், காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அடங்கிய பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். நிலைமையைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்காக வங்கதேச தூதரகம் அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சர்வ பாரதிய ஹிந்தி பெங்காலி சங்கம், விஹெச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் துர்காபாய் தேஷ்முக் தெற்கு வளாக மெட்ரோ நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு, வங்கதேச இந்துக்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் பேசிய ஒரு போராட்டக்காரர் ஒருவர்” வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த நாடு ராமர் நாடு. இந்த நாடு கிருஷ்ணர் நாடு. நாங்கள் இங்கு யாரையும் கொல்வதில்லை, ஆனால் எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியம் அங்கே ஆபத்தில் உள்ளது,” என்று கூறினார்.

அதிகரித்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து டெல்லி மற்றும் அகர்தலாவில் உள்ள தூதரக மற்றும் விசா சேவைகளை வங்கதேசம் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் தொடரும் போராட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்க வங்கதேச வெளியுறவு அமைச்சகம், வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரணய் வர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவில் உள்ள தனது தூதரக அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து வங்கதேசம் ஆழ்ந்த கவலை தெரிவித்தது.

வங்கதேச தூதரகங்களில் பாதுகாப்பு குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. புது டெல்லியில் நடந்த போராட்டம் சிறிது நேரமே நீடித்தது என்றும், அது எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version