வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன் (75). கூலித் தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் குமார் (37) என்பவர் திங்கள் சந்தையில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ராஜேஷ் குமார் தனது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 4-ம் தேதி ராஜேஷ் குமார் தனது பெற்றோரிடம் தகராறு செய்து தந்தை தங்கப்பனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்தவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கப்பன் நேற்று (18-ம் தேதி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.