கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் ஃபைபர் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் மண்ணெண்ணெய் கிட்டங்கி உள்ளது. இங்கு வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய மூன்று மீனவர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 975 படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஃபைபர் படகு வைத்திருப்பவர்கள் நான்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வாங்க வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டது. ஆனால் இதை படகு வைத்திருப்பவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் லைஃப் ஜாக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதை எடுத்து நேற்று மீனவர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கிட்டங்கி முன் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை ஆய்வாளர் ஜெகன் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பயனாளிகள் அனைவருக்கும் இந்த மாதம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்ததால் மீனவர்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.














