பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தராகண்ட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத பாகுபாடின்றி பொது மக்கள் அனைவருக்கும் ஒரேவிதமான சட்ட விதிமுறைகளை பின்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என உத்தராகண்ட் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி இந்த மசோதாவை உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பாஜக அரசு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. அங்கு பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்தாண்டு மார்ச் மாதம் ஒப்புதல் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில், ‘‘ பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு சட்டப்பேரவைியில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறப்பட்டதால், இது தற்போது சட்டமாகியுள்ளது. இதற்கான பயிற்சி திட்டங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த சட்டத்தை அமல்படுத்தும் தேதியை நாங்கள் விரைவில் அறிவிப்போம். இவ்வாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.














