புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57).
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான இவர் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காண லிலும் பங்கேற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வந்த தலைவர்கள், ஒவ்வொரு விதமாக செயல்படுகிறார்கள். வரும் தேர்தலிலும் எனக்குப் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தவெகவில் இணைந்துள்ளேன் என்றார்.
ஏற்கெனவே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.














