அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதில் கிராம அஞ்சல் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுவதாக மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழக அஞ்சல் துறை சார்பில், கிராம அஞ்சல் ஊழியர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொலைத் தொடர்பு துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தமிழக அஞ்சல் வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 10 சிறந்த கிராம அஞ்சல் ஊழியர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: இதயத் துடிப்பு சமூகங்களை இணைப்பதிலும், கடைசி நிலை வரை அரசு நிர்வாகத்தைக் கொண்டு செல்வதிலும் அஞ்சல் துறை பங்காற்றுகிறது.
கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் கிராமப்புற இந்தியாவின் இதயத் துடிப்பாக திகழ்கின்றனர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசு சேவைகளைக் கொண்டு செல்கின்றனர்.
கடிதங்கள் முதல் பார்சல்கள் வரையும், அரசுத் திட்டங்கள் முதல் வங்கிச் சேவைகள் வரையும், ஆதார் முதல் பாஸ்போர்ட் சேவைகள் வரையும், கிராமங்களையும், தெருக்களையும், வீடுகளையும் அஞ்சல் ஊழியர்கள் சென்றடைகின்றனர்.
கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், இந்த ஊழியர்கள் நம்பிக்கையின் பாலமாக, கிராமப்புறப் பகுதிகளுக்கு சேவை செய்கின்றனர்.
பார்சல் வருவாய் வாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையின் பார்சல் வருவாய் தற்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில், தனியார் கூரியர் நிறுவனங்கள் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி ஈட்டுகின்றன.
இன்றைய சரக்குப் போக்குவரத்துச் சந்தை சுமார் 10 பில்லியன் டாலர் (ரூ.90 ஆயிரம் கோடி) வாய்ப்பைக் கொண்டுள்ளது. 2031-ம் ஆண்டுக்குள் இது 20 பில்லியன் டாலராக (ரூ,1.8 லட்சம் கோடி) ஆக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதில் அஞ்சல் ஊழியர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழக அஞ்சல் வட்டம் ஒட்டு மொத்த வருவாயில் நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த அஞ்சல் ஊழியர்கள், அர்ப்பணிப்புடன் சேவைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ், சென்னை நகர மண்டலத் தலைவர் ஜி.நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.














