காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார் ஸ்ரேயஸ் ஐயர், அப்போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை நீண்ட தூரம் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்து, அலெக்ஸ் கேரியை அவுட்டாக்கினார் ஸ்ரேயஸ்.
பந்தை பிடித்த பின்னர் அவர் நிலை தடுமாறி மைதானத்தில் கீழே விழுந்தார்.இதையடுத்து அவர் தனது இடது விலா எலும்பில் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரேயஸ் ஐயரின் காயம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஃபீல்டிங்கின்போது பாய்ந்து சென்று கேட்ச் பிடித்த ஸ்ரேயஸ் ஐயரின் இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயம் குறித்த மதிப்பீடு செய்வதற்காக தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














