சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையத்துக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அதற்கு மாற்று இயந்திரங்களை வழங்குதல், இந்த பணிகளின் போது பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை வசதி, மின் வசதி, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை களஆய்வு மேற்கொண்டு, தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டம் – ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.













