திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: ஹனுமன் வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

0
291

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் உற்வச மூர்த்தி மலையப்பர் எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சிகள்: மாட வீதிகளில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. யானை, குதிரை, காளைகளின் பரிவட்டங்கள் முன்னால் செல்ல வாகன சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் சியாமள ராவ், வெங்கய்ய சவுத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மதியம் ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன சேவை நடைபெற்றது. பிறகு மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது.

இதில் தங்க ரதத்தில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரளான பெண் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நேற்றிரவு கஜ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி னார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here