Home உலக செய்திகள் இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி

இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி

0

பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் என்பிபி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கடந்த 18-ம் தேதி இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். அதிபர், பிரதமர் உட்பட 22 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

இந்த சூழலில் 10-வது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசாநாயக்க உரையாற்றினார். அவர் கூறியதாவது: அனைத்து இன மக்களும் என்பிபி கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர். இதன்மூலம் தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை.

குற்றங்களை தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிபர் உட்பட அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். சர்வதேச செலாவணி நிதியத்தின் செயல்திட்டத்துடன் இலங்கை பொருளாதாரத்தை மீட்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அதிபர் அனுர குமார திசாநாயக்க பேசினார்.

இலங்கை நாடாளுமன்ற அவையின் புதிய தலைவராக என்பிபி கூட்டணியை சேர்ந்த கலாநிதி அசோக ரன்வல தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது முன்னிலையில் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version