பேசாப் பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே என்று ‘காதல் என்பது பொதுவுடைமை’ இசை வெளியீட்டு விழாவில் ரோகிணி பேசினார்.
வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் ரோகிணி, “இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்கன்னு சொன்னபோது, ‘இல்ல என் தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்திருக்கார். இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்க வேண்டும் என யோசித்து, குடும்பத்தில் துவங்கணும் என ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கார்.
குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இந்த லட்சுமி கேரக்டரை சரியாகப் பண்ண முடியுமா என நினைத்தேன். எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கோ, அத்தனை கேள்விகளையும் லட்சுமி மூலமாக இயக்குநர் கேட்க வைத்துள்ளார். நான் சமூகத்தின் முகமாக இப்படத்தில் வருகிறேன். அது ரொம்பவே சவாலாக இருந்தது.
அத்துடன் ரொம்ப அன்பான ஒரு அம்மாவோட பரிதவிப்பும் லட்சுமியிடம் இருந்தது. நான் நிறைய அம்மா கதாபாத்திரம் பண்ணியிருக்கேன். ‘விட்னெஸ்’, ‘தண்டட்டி’, ‘3’ என நான் பண்ணின ஒவ்வொரு அம்மாவும் வேற வேற அம்மா. ஹீரோக்கு அம்மாவா நடிக்கணும் என இயக்குநர் யாராதாவது கேட்டால், ‘அம்மாங்கிறது ஒரு கதாபாத்திரமே கிடையாது. ஹீரோக்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவங்களால கதையில் ஏதாச்சும் நடக்குதா?’ எனக் கேட்பேன்.
சில படத்துல தான் ரொம்ப சரியாக நடித்துள்ளேன் எனத் திருப்தியாக இருக்கும். அதில் இந்த லட்சுமி கதாபாத்திரமும் ஒன்று. இது எங்களோட கதை. ஒரு அம்மா – பொண்ணு கதை. இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும். இங்கும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ரசிகர்கள் ரெடியாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
எல்லாத்தையும் விட, பேசாப் பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை செய்துள்ளோம்” என்று பேசினார் ரோகிணி.














