தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் காட்டத்தை கிளப்பி இருக்கும் நிலையில், திமுக-வை விட்டுவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகளை பழனிசாமி வம்புக்கிழுத்துப் பேசுவது ஏன் என்ற சர்ச்சையும் வெடித்திருக்கிறது.
அதிமுக – பாஜக உடன்படிக்கை ஏற்படுவதற்கு முன்பு திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளுக்கு, அந்தப் பக்கம் அணி மாறிவிடலாமா என்ற சபலமும் லேசுபாசாக இருந்தது. அதனால் அந்தக் கட்சிகளும் அதிமுக-வை அட்டாக் செய்யவில்லை; அதிமுக-வும் அதில் சில கட்சிகளை போற்றிப் பாடியது.
இந்த நிலையில், அனைவரும் சந்தேகப்பட்டது போலவே மீண்டும் அதிமுக – பாஜக உறவு மலர்ந்தது. இதனால், திமுக கூட்டணிக் கட்சிகள் மாற்று சிந்தனையை மூட்டைகட்டி வைத்துவிட்டு, பாஜக உடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததை விமர்சிக்க ஆரம்பித்தன. அதேபோல் பழனிசாமியும் திமுக கூட்டணிக் கட்சிகளை காய்ச்சி எடுக்க ஆரம்பித்தார்.
முதலில் விசிக-வை வம்புக்கிழுத்த பழனிசாமி, “விசிக-வை திமுக விழுங்கிவிடும்” என்றார். அதற்கு, “எளிய மக்களின் கட்சியான விசிக-வை யாராலும் வீழ்த்தவும் முடியாது; விழுங்கவும் முடியாது” என்று பதிலடி கொடுத்தார் திருமா.
அடுத்து, காம்ரேடுகளை கலாய்த்த பழனிசாமி, “இந்தத் தேர்தலோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போய்விடும்” என்றார். இதற்கு பதில் சொன்ன சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “காணாமல் போகப் போவது கம்யூனிஸ்ட்களா… அதிமுக-வா என்பதை 2026 தேர்தல் முடிவுகள் சொல்லும்” என்றார். அடுத்ததாக இப்போது காங்கிரஸ் அட்டாக்கில் வந்து நிற்கிறார் பழனிசாமி.
ஆளும் கூட்டணியை விமர்சிப்பது தான் எதிர்க்கட்சிகளின் வேலையே என்றாலும் பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பின்னால், ‘என்ன சொன்னாலும் அந்தக் கூட்டணி அப்படியே இருக்கிறதே’ என்ற ஆதங்கமே மேலோங்கி இருப்பதாகச் சொல்லும் அரசியல் நோக்கர்கள், “மிகப்பெரிய ஒரு கட்சியை வழிநடத்தும் தலைவருக்கு தனி மனித தாக்குதல் நடத்தும் அளவுக்கு வன்மம் தேவை இல்லையே” என்கிறார்கள்.
பாஜக உடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததில் திமுக-வுக்கு கோபம். அதேபோல் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதில் அதிமுக-வுக்குக் கோபம். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது இன்றைய தமிழக அரசியல் களம். இதில், தாங்கள் அதிமுக உடன் இருப்பதால் திமுக அணியில் இருக்கும் எந்தக் கட்சியும் அதிமுக அணிக்கு வராது என்று தெரிந்தும் பாஜக தலைவர்களும் திமுக-வின் தோழமைக் கட்சிகளை துவைத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தமிழிசை சவுந்தரராஜன், “திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும்” என்று ‘அக்கறைப்படுகிறார்’. ஆக, இவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் திமுக கூட்டணி எப்படியாவது சிதைந்துவிடாதா என்பதாகவே இருக்கிறது.
பாஜக உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்ததுமே, “இன்னொரு மிகப் பெரிய கட்சி அதிமுக கூட்டணியில் இணையப் போகிறது” என்று சஸ்பென்ஸ் வைத்தார் பழனிசாமி. ஆனால், அப்படி எந்தக் கட்சியும் எம்ஜிஆர் மாளிகைப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. அவர் சொன்ன அந்தக் கட்சி தவெக-வாக இருக்குமோ என ஹாஷ்யங்கள் றெக்கை கட்டிய நிலையில், விஜய்யும் அதிமுக கூட்டணிக்கான கதவுகளை அடைத்துச் சாத்தினார். இதனால், அதிமுக அணிக்கு போகலாமா என யோசித்துக் கொண்டிருந்த தேமுதிக-வும் பாமக-வும் இப்போது என்ன அவசரம் என பதுங்கிவிட்டன.
இப்படி பாஜக-வை தவிர அதிமுக முகாமுக்கு இதுவரைக்கும் வேறெந்த கட்சியும் வராத நிலையில், திமுக தனது கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், இன்னும் சில கட்சிகளையும் தங்கள் பக்கம் ஈர்க்க தந்திரக் காய்களை நகர்த்தி வருகிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான், திமுக-வை விட்டுவிட்டு திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சித்து அந்தக் கூட்டணிக்குள் குண்டு வீசிப் பார்க்கிறார் பழனிசாமி.
தனது விமர்சனங்களால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ரோஷப்பட்டு கூட்டணியை விட்டு வெளியேறிவிடதா என்பதே பழனிசாமியின் எதிர்பார்ப்பு. ஆனால், அவர் தனக்குப் பக்கத்தில் பாஜக-வை வைத்துக்கொண்டு பேசுவதால் திமுக கூட்டணிக் கட்சிகள் அவரது ஒவ்வொரு விமர்சனத்துக்கும் பதிலடி கொடுத்து வருகின்றன.
திமுக கூட்டணியை கலைப்பதற்கான விமர்சனங்கள் கைகொடுக்காமல் போனதால் அடுத்ததாக சமூக வலைதள பதிவுகள் மூலமாக, சும்மா இருக்கும் காங்கிரஸை சுரண்டிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். ‘காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அந்தக் கூட்டணி 175 தொகுதிகளில் வெற்றி பெறும்’ என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்திருப்பதாக இப்போது சமூக வலைதளத்தில் செய்திகளைப் பரப்புகிறார்கள்.
அதற்கேற்ப காங்கிரஸ்காரர்களும், திமுக கூட்டணியில் எங்களுக்கு மரியாதை இல்லை, இம்முறை கூடுதல் சீட் கேட்போம், அமைச்சரவையிலும் பங்கு வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பழனிசாமியும் பாஜக-வும் எதிர்பார்ப்பதும் இதைத்தானே!