சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு உள்ளார்.
கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன்கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதன் பிறகு 4.5 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கூறும்போது, “முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியை, தேவசம் போர்டிடம் தந்திரி கண்டரரு ராஜீவரு அறிமுகம் செய்திருக்கிறார். அவரது அறிவுரைப்படியே துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னிகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக ராஜீ வருவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தங்கம் திருட்டு வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அமலாக்கத் துறை வட்டா ரங்கள் கூறும்போது, “தங்கம் திருட்டு வழக்கில் கேரள போலீஸார் 11 பேரை கைது செய்துள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன் அவர்களை எங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்’’ என்று தெரிவித்தன.



