தேங்காப்பட்டணம் அருகே இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் மரியா ஜான் (64). மீனவர். இவர் கடந்த மாதம் 8-ம் தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து தூத்துறை சேர்ந்த அருள் (37) என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றார். உடன் 13 தொழிலாளர்கள் சென்றனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு நேற்று காலை 100 கடல் மைல் தூரத்தில் இருந்து தேங்காப்பட்டணம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மரியா ஜான் திடீரென மயங்கி விசைப்படகில் சாய்ந்தார். இதைக் கவனித்த உடன் சென்ற தொழிலாளர்கள் அவரை நேற்று பிற்பகல் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கரை சேர்த்தனர். அப்போது மரியா ஜானை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.
இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். ஆழ்கடலில் படகில் மயங்கிப் பலியான தொழிலாளி மரியா ஜானுக்கு சரீஜா என்ற மனைவியும் நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.














