திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாமிசம், மதுபானம், சிகரெட், போதைப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபம் அருகே, தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மாள் ஆகியோர் துப்புரவு தொழிலாளர்களுடன் அமர்ந்து மாமிச உணவை சாப்பிட்டுள்ளனர். இதனை அப்பக்கம் நடந்து செல்லும் பக்தர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை கண்டித்தனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டதால், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இது வைரல் ஆனது. நேற்று இது தொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் உண்மைதான் என தெரியவந்ததையடுத்து அவர்கள் மீது திருமலை 2-வது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்து அதற்கான உத்தரவும் நேற்று பிறப்பிக்கப்பட்டது.














