தமிழகக் கோயில்களில் இன்று முதல் கோயில் நிர்வாகமே பிரசாதங்களை தயாரித்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த நாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பதி லட்டு, பழநி பஞ்சாமிர்தம், அழகர்கோவில் தோசை, ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கார அடிசல் போன்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்படுகிறது. கோயில்களில் பிரசாத விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரத்தை உறுதி செய்வது கோயில் நிர்வாகத்தின் கடமை.
இந்நிலையில், கோயில்களில் வணிக நோக்கில் காலியிடங்களில் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, கோயில்களில் பிரசாதம் தயாரிப்பு மற்றும் விற்பனையை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தின் தரம் உறுதி செய்யப்படுகிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. கோயில் நிர்வாகமே நேரடியாகப் பிரசாதத்தை தயாரித்து விநியோகிப்பது குறித்து பரிசீலிக்கவும், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செயல்படும் பிரசாத விற்பனை நிலையங்கள் மற்றும் தேங்காய், பழங்கள், பூக்கள், மாலைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கான குத்தகை உரிமம் ஜூன் 30 தேதியுடன் முடிவடைகிறது. இந்த உரிமங்களை புதுப்பிப்பது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், ஜூன் 30-க்கு பிறகு கோயில்களில் பிரசாத நிலையங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இன்று முதல் (ஜூலை 1) பக்தர்கள் வழிபடுவதற்குத் தேவையான தேங்காய், பழங்கள், பூக்கள் மற்றும் மாலைகள் போன்ற பூஜைப் பொருட்களும், பக்தர்களால் நம்பிக்கையுடன் வாங்கப்படும் லட்டு, அரவணை மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களும் எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை தரப்பில், நாளை (இன்று) முதல் கோயில்களில் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
