ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்ரரா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்த்தனர். ஷிவம் துபே 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் விளாசிய நிலையில் வெளியேறினார். திலக் வர்மா 5, ஜிதேஷ் சர்மா 3, வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதிக்கட்டத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 21 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
168 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் அதிரடி தொடக்கம் கொடுத்தார். 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த அவரை அக்சர் படேல் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். இதையடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஷை 12 ரன்களில் போல்டாக்கி பெவிலியனுக்கு திருப்பினார் அக்சர் படேல். இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி ஆட்டம்
கண்டது.
கேப்டன் மிட்செல் மார்ஷ் 24 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் துபே பந்தை விளாச முயன்ற போது பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் ஆனது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 88 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. ஆனால் மேற்கொண்டு 31 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 7 விக்கெட்களையும் கொத்தாக தாரைவார்த்தது.
தனது அடுத்த ஓவரில் அதிரடி வீரரான டிம் டேவிட்டையும் (14 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார் ஷிவம் துபே. இதையடுத்து களமிறங்கிய ஜோஷ் பிலிப் 10 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் நடையை கட்டினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்களில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்துகளில், 17 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
பென் டுவார்ஷுயிஸ் 5 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். சேவியர் பார்ட்லெட் (0), ஆடம் ஸம்பா (0) ஆகியோர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேதன் எலிஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 1.2 ஓவர்களை வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அக்சர் படேல் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 2 விக்கெட்கள் கைப்பற்றினார். அவர், 12 டாட்பால்களை வீசி ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். ஷிவம் துபே 2 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்வானார்.
48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டிருந்தது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி மற்றும் 5-வது போட்டி நாளை (8-ம் தேதி) பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெறுகிறது.














