ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் தொடரை இந்திய அணி ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் 3-வது போட்டி ஹராரேவில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாட முற்பட்ட அபிஷேக் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார். அவர் 49 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் எடுத்த 2-வது அரை சதமாகும் இது. ஸ்ரேயஸ் ஐயர் 27 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். திலக் வர்மா 11 ரன்களும், ரிங்கு சிங் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடத் தொடங்கியது. ரியான் பர்ல் 54, பிரையன் பென்னெட் 0, பென் கரண் 20, டியான் மையர்ஸ் 19, சிகந்தர் ராஸா 0, வெஸ்லி மாதேவரே 28, மறுமணி 1, பிராட் இவான்ஸ் 14 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர்.
முடிவில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை மட்டுமே ஜிம்பாப்வே அணி எடுத்தது. இதையடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. தொடர் நாயகன்
இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றினார்.
