Home மாநில செய்திகள் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்: இபிஎஸ்

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்: இபிஎஸ்

0

முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும்போது, “முல்லை பெரியார் அணையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியார் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த 4-ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிக்காக கட்டுமானப் பொருட்களுடன் வாகனத்தில் சென்றனர். ஆனால், வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. கேரள அரசு அணை பராமரிப்பு பணிக்கு இடையூறு செய்த காரணத்தால், அங்குள்ள 5 மாவட்ட விவசாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் கொத்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக கேரளா செல்கிறார். அதே நிகழ்ச்சியில் கேரள முதல்வரும் கலந்து கொள்கிறார். அந்த முதல்வரிடம் பேசி முல்லை பெரியார் அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை தொடங்குவதற்கான சூழலை உருவாக்கி தர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: முல்லை பெரியாறு அணையில் பழுது பார்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், அதனை கேரள அரசு தடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இது கேரள அரசுக்கும், நமக்கும் நன்றாக தெரியும். முதல்வரும், நானும் கேரளா செல்கிறோம். இதுபற்றி பேசுவோம்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, கேரள அரசு இடையூறு செய்கிறது என்று சொல்லியிருக்கிறார். அப்படி சொல்லக்கூடாது.

துரைமுருகன்: நீதிமன்றம் உத்தரவை மீறி தடுத்தால் அதற்கு என்ன பெயர். எதிர்க்கட்சி தலைவர் சொல்வதுதான் அதற்கு பெயர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version