Home மாநில செய்திகள் காலை உணவு திட்டம் குறித்த அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு பதில்

காலை உணவு திட்டம் குறித்த அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு பதில்

0

காலை உணவு திட்டம் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நேற்று சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், ‘காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும்.

எனவே, பள்ளி மாணவர்களுக்கு வெறும், சாப்பாடு, இட்லி, தோசை என கொடுக்காமல், சிறுதானியங்கள், முட்டை உள்பட சத்தான உணவுகளை வழங்க வேண்டும். இதில் நிதி பற்றாக்குறை இருந்தாலும், நிதி உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என தெரிவித்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக அரசின் தகவலை உறுதிப்படுத்தும் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டியில் தோசை, இட்லி வழங்கப்படுவதில்லை. சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிய உணவில் 5 நாட்களுமே முட்டை வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு நிர்ணயித்த கலோரிகள், புரதத்தை விடவும் அதிகமாகவே தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் தினமும் காலை மற்றும் மதிய வேளையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் விவரங்களையும், இந்த திட்டத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு எவ்வளவு கலோரி, புரதம், கொழுப்பு, இரும்பு, சுண்ணாம்பு சத்துகள் கூடுதலாக கிடைக்கிறது என்ற விவரங்களையும் புள்ளி விவரத்துடன் தமிழக அரசின் தகவல் உறுதிப்படுத்தும் அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version