“தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? ” என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2016 முதல் 2022 வரையிலான 6 ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய்பீம்’, ‘கார்கி’ ஆகியவை சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பா.ரஞ்சித் இந்தக் கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



