தமிழின் மாற்று சினிமா முன்னோடி இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்

0
289

எழுத்தாளரும் மாற்று சினிமா முன்னோடியுமான இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர் ஜெயபாரதி. இவர் பெற்றோர் ராமமூர்த்தியும், சரோஜா ராமமூர்த்தியும் எழுத்தாளர்கள். வணிக திரைப்படங்கள் இல்லாமல் மாற்று சினிமா முயற்சி என்ற உறுதியுடன் ‘கிரவுட் பண்டிங்’ முறையில் ‘குடிசை’ என்ற படத்தை இயக்கினார். 1979-ல் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தில்தான் டெல்லி கணேஷ், கமலா காமேஷ் இருவரும் அறிமுகமானார்கள்.

அடுத்து ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’, ‘குருஷேத்திரம்’, ‘புத்திரன்’ ஆகிய படங்களை இயக்கினார், ஜெயபாரதி. ‘நண்பா நண்பா’ படத்துக்காக வாகை சந்திரசேகருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ‘புத்திரன்’ படத்துக்கு சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம் என தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தன.

கே.பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் ஜெயபாரதி. பாலசந்தர் நடிக்க அழைத்த போது ‘குடிசை’ படத்தை இயக்கத் தொடங்கியதால் நடிக்க மறுத்திருக்கிறார். சென்னை ஆவடி அருகே மனைவி பிரீத்தாவுடன் வசித்து வந்த அவருக்கு நேற்று முன் தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரை பிரபலங்கள் சிலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு நேற்று மாலை நடந்தது.

மறைந்த ஜெயபாரதிக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here